×

விழுப்புரம் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து: 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பல்லவாடி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலானது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, இவர் குடிசை வீட்டில் இன்று காலை சமையல் செய்து கொண்டிருந்த போது அந்த குடிசை வீட்டில் தாழ்வான பகுதியில் தொங்கி கொண்டிருந்த ஒரு கீற்று அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ மீது பட்டு வீடானது பற்றி எரிந்தது. மேலும் தீ மளமளவென பரவி அருகிலிருந்த தங்கமலை என்றவருடைய வீட்டில் பரவ தொடங்கியது. அப்போது தங்கமலை வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அருகிலிருந்த மணிகண்டன், சிவகாமி, செல்வராஜ், செல்வகுமார், வசந்தா உட்பட சுமார் 10க்கும் மேற்பட்டவர்களின் வீட்டில் தீ பரவியது. இதனால் அந்த கிராமமே புகை மண்டலமாக சூழ்ந்து வீடுகள் எரிய ஆரம்பித்தது.

கேஸ் சிலிண்டர் வெடித்த சிறிது நேரத்தில் அந்த கிராம மக்கள் அலறி அடித்து அங்கிருந்து வெளியேறினார். இதையடுத்து உடனடியாக அந்த பகுதி மக்கள் தண்ணீரை வைத்து தீயினை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வராத காரணத்தால் அருகிலிருந்த வீடுகளில் உள்ள கேஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில், 30 தீயணைப்பு படை வீரர்களுடன் வந்து குடிசைகளின் மீது தண்ணீரை பீழ்ச்சடித்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சுமார் 1 மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் புகைமண்டலம் சூழ்ந்து இருப்பதால் மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தீ பரவமலிருக்க தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : fire ,home fire ,Villupuram ,houses , Villupuram, cottage, fire, over 10, houses, ruin
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா