அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நாளை செல்கிறார். இதேபோல உ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியாவும் இன்று வழிபாடு செய்கிறார். மேலும் ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால்தாசின் 81வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அயோத்தியில் கொண்டாட விசுவ இந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் பேருந்து, ரயில் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த லஷ்கர்-ஈ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் ஊடுவி அங்குள்ள அம்பேத்கர் நகர், ஃபைஸாபாத் மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தப் பகுதிகளில் இருந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை ஈடுபடுத்தும் பணியில் முகமது உமர் மத்னி என்பவர் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. உளவுத்வுதுறையின் எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.