×

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியில் தமிழர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்: எஸ்ஆர்எம்யூ கண்ணையா பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியில் தமிழர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என்று எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையா கூறினார். தெற்கு ரயில்வே சார்பில் நேற்று முன்தினம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், கட்டுப்பாட்டு அறைக்கும், ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இடையேயான தொடர்பின் போது இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  தமிழில் பேசுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பிராந்திய மொழிகள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் ஸ்டேஷன் மாஸ்டர் தான் சொல்லும் தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு முழுமையாகச் சென்றுவிட்டதா என்பதை உறுதி செய்வது அவருடைய முழு பொறுப்பு. இந்த உத்தரவு அமலுக்கு வருவதையடுத்து நியமிக்கப்பட்ட அதிகாரிகள்  மேற்பார்வை செய்வார்கள் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தெற்கு ரயில்வே தலைமை இயக்கத்துறை மேலாளர் அனந்தராமனை தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) பொது செயலாளர் கண்ணையா நேற்று சந்தித்து  கடிதம் வழங்கினார்.
பின்னர் கண்ணையா நிருபர்களிடம் கூறியதாவது:தெற்கு ரயில்வேயில் இருந்து நிலைய அதிகாரி மற்றும் வண்டி கண்காணிப்பாளர்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தான் பேச வேண்டும் என்ற உத்தரவு குறித்து எனது கவனத்துக்கு வந்ததும், காலை இதுகுறித்து தெற்கு ரயில்வே தலைமை  இயக்கத்துறை மேலாளர் அனந்தராமனை நேரில் சந்தித்து, இதை ரத்து செய்யக்கோரி நேரில் கடிதம் கொடுத்தேன். தமிழகத்துக்கு வரும் தூதரக அதிகாரிகள் தமிழை கட்டாயமாக கற்றுக் கொள்ளவேண்டும்.

இதேபோல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தமிழகத்துக்கு பணிக்கு வரும்போது தமிழை கற்றுக்கொள்ள வேண்டும். அதை மாற்றி இந்தியில், ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று கூறுவது தவறு. தமிழ் மட்டும் தெரிந்த பயணி நிலைய அதிகாரிகளிடம் பேச இந்தி கற்றுக்கொண்டு தான் வரவேண்டுமா என்ற கேள்வி எழுப்பினேன். இதை ரத்து செய்யவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தேன். இதையடுத்து உடனே இந்த சுற்றறிக்கையை ரத்து செய்துவிட்டோம் என்ற கடிதத்தை கொடுத்தனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணிகளில் தமிழர்களை மட்டும் நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.




Tags : Tamils ,interview ,SRMU Kanniah ,Tamil Nadu , Tamil Nadu, Tamils , Railway , SRMU
× RELATED தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது...