சென்னை: சென்னை மற்றும் தமிழக மக்கள் குடிநீருக்கு அலையும் கொடுமைக்கு பொறுப்பேற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நீர் பற்றாக்குறை குறித்து சரமாரி கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் திருந்தியபாடில்லை. சென்னைக்கு எவ்வளவு குடிநீர் தேவை என்பதைக் கூடத் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் தினமும் 7000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்து கொண்டு வருகிறோம் என்று இந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பவரே பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறிக் கொட்டி, பத்திரிக்கையாளர் நகைப்புக்குப் பாத்திரமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.
நெம்மேலி மற்றும் மீஞ்சூர் கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டங்களில் 200 மில்லியன் (தலா 100 மில்லியன் லிட்டர்) லிட்டர் குடிதண்ணீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கவில்லை என்பது சென்னை பெருநகர குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கே நன்கு தெரியும். 100 மில்லியன் லிட்டரை 115 மில்லியன் லிட்டராக உயர்த்த நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் செலவிடப்பட்டது எவ்வளவு? அதன்படி இன்னும் ஏன் நெம்மேலியிலிருந்து 115 மில்லியன் லிட்டர் தண்ணீரை எடுக்க முடியவில்லை? உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கிறது. அவரது பணி அமைச்சர் பணியல்ல. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் மட்டுமே.
தெருத்தெருவாக மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு சைக்கிளிலும், ரிக்ஷாக்களிலும் தொலை தூரம் சென்று ஒரு குடம் தண்ணீர் சேகரிக்கத் தள்ளப்பட்டுள்ளது ஏன்? மெட்ரோ வாட்டர் குழாய்களில் வரும் குடிநீரும் பல இடங்களில் துர் நாற்றம் வீசுவது ஏன்? தண்ணீர் இல்லாமல் பல உணவகங்கள் மூடப்படுவது ஏன்? தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் ஐ.டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை. இப்போது அவசர அவசரமாக 150 மில்லியன் லிட்டர் நெம்மேலி கடல் நீர் திட்டத்தை நிறைவேற்ற விடப்பட்டுள்ள டெண்டரில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. சென்னைக்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரைப் பெறுவதற்குக் கூட ஆந்திர மாநில முதல்வரைச் சந்திக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக டெல்லிக்குச் சென்று பா.ஜ.க. மத்திய அமைச்சர்களைச் சந்தித்து எங்கள் கட்சிப் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள், எங்கள் மீது எந்த ஊழல் நடவடிக்கையும் எடுத்து விடாதீர்கள் என்று மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்டுக் கெஞ்சுவதை மட்டுமே உள்ளாட்சித்துறை அமைச்சர் இந்த மூன்று வருடங்களில் செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், நான் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே குடி நீர் விநியோகம் செய்வதாக வரும் செய்திகள் ஆறுதலாக இருந்தாலும் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தங்களால் இயன்றவரை மேலும் முனைப்புடன் நிறைவேற்றிட வேண்டும் என்று திமுக சட்ட மன்ற உறுப்பினர்களை கேட்டு கொள்கிறேன். சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட வேண்டும். இந்தத் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி அவர் ராஜினாமா செய்யத் தவறினால், முதலமைச்சர் உடனடியாக, இன்றைய குடிநீர்ப் பஞ்சத்திற்கும் கோடானு கோடி மக்களின் துன்பத்திற்கும் வித்திட்ட அவரை, அமைச்சர் பதவியிலிருந்து தயவுதாட்சண்யம் பார்க்காமல் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.