சென்னை: மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அளவில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டிவனம் தைலாபுரத்தை அடுத்த ஓமந்தூரில் கடந்த 12ம் தேதி நடந்த பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அளவிலும், மாநகரங்களில் பகுதி அளவிலும் தனித்தனியாக பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தும்படி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியிருக்கிறார்.
அதன்படி, நாளை மறுநாள் (16ம்தேதி), 18ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான பொதுக்குழுக் கூட்டங்களையும், மாநகராட்சிகளில் பகுதிகள் அளவிலான பொதுக்குழு கூட்டங்களையும் அந்தந்த நிலையிலான நிர்வாகிகள் ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.தொடர்ந்து, மாவட்ட அளவிலான பொதுக்குழுக் கூட்டங்களை இம்மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்த வேண்டும். மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கட்சி வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது ஆகியவை குறித்தும் பொதுக்குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.