×

காவேரிப்பாக்கம் அருகே பரபரப்பு 2 குழந்தைகளை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அருகே 2 குழந்தைகளை கொன்று, தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த வேதாமங்கலத்தை  சேர்ந்தவர் சங்கர்(40). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நித்யா(30). இவர்களுக்கு அஸ்வினி(7) என்ற மகளும், தனுஷ்(4) என்ற மகனும் இருந்தனர். அஸ்வினி அதே பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பும், தனுஷ் அங்கன்வாடி பள்ளியிலும் பயின்று வந்தனர். இந்நிலையில் சங்கர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். நித்யா, மகன்,  மகள் மற்றும் மாமியார் பார்வதி(60), மைத்துனர் குமார்(35) ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை பார்வதி வாலாஜா அரசு மருத்துவமனைக்கும், குமார் சிறுகரும்பூர் பகுதியில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவுக்கும் சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்தில் குமார் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டியே கிடந்தது. இதனால், பின்புறம் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள மின்விசிறியில் நித்யா தூக்கில் சடலமாக தொங்கினார். அவரது காலுக்கு அடியில் அஸ்வினி, தனுஷ் ஆகிய 2 குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர். நித்யா தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. புகாரின்படி காவேரிப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்னையில் குழந்தைகளை கொன்றுவிட்டு நித்யா தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகள் மற்றும் தாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kavarapakkam ,children ,police investigation , Kavarapakkam , 2 children killing, mother suicid,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...