தென்தாமரைக்குளம் : தென்தாமரைக்குளம் அருகே கீழமணக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை மற்றும் மின்வெட்டால் தும்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. கீழமணக்குடி கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து கரையை மோதி வந்தன. இதனால் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பழையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர் கீழமணக்குடி கடலில் வீணாக கலந்து வருகிறது. பொதுவாக கோடைக்காலங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொது மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த கோடையிலும் பல நீர்நிலைகள் வறண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடலில் வீணாக கலக்கும் பழையாற்று தண்ணீரை சேமிக்க அரசு திட்டங்கள் வகுத்து செயல்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையால் கயிறு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். பலமான காற்று வீசியதால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு பொது மக்களை சிரமத்தில் ஆழ்த்தியது.