×

கொல்கத்தாவில் அரசு மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம் அறிவிப்பு

டெல்லி : வரும் திங்களன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. அரசு தனியார் மருத்துவர்கள் என அனைத்து தரப்பு மருத்துவர்களும் திங்களன்று வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஐந்து நாட்களாக மருத்துவர்கள் போராட்டம்


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த திங்கள் கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் மருத்துவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த ஐந்து நாட்களாக மேற்குவங்க மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தி வருவதால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்:

மேற்குவங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தலையில் ஹெல்மெட் மற்றும் பேண்டேஜ் அணிந்தவாறு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து டெல்லியில் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தனர். அதேபோல மருத்துவர்கள் சங்கமும் முடிவு செய்துள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனை முன்பாக அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அனைவரும் தலையில் பேண்டேஜ் கட்டியவாறு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவிலும் வேலை நிறுத்த போராட்டம்:

இதனைத்தொடர்ந்து, கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பாக  போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள வடக்கு பெங்கால் மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து, ரெய்ப்பூரில் உள்ள Dr. Bhimrao Ambedkar மருத்துவமனை மருத்துவர்கள் நீதி வேண்டும் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றன்றனர்.

ஹைதராபாத் மருத்துவர்கள் பேரணி:


அதேபோல,  தெலுங்கானாவில் மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நிசாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அனைவரும் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

இந்நிலையில் மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திங்கள் கிழமை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : strike ,Doctors ,country ,government doctors ,Kolkata , Doctors, Announcements, Doctors Association, Struggle
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து