ஊட்டி : கோடை சீசன் முடிந்த நிலையில் ஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. கோடை சீசன் முடிந்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் நீலகிரி மவாட்டத்திற்கும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வாரம் வரை அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், படிப்படியாக குறைந்து தற்போது மிகவும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே ஊட்டி வருகின்றனர்.
இதில், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். வடமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்துள்ளது. இதனால், மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், வார நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. நேற்றும் ஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட்ட மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.