புதுச்சேரி : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்..புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராதாமணி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாமணி திமுகவின் விழுப்புரம் மத்திய, மாவட்ட அவைத்தலைவராகவும் இருந்தார். 2016ம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு ராதாமணி வெற்றி பெற்றார்.
புற்றுநோய்க்கு சென்னையில் சிகிச்சை பெற்ற ராதாமணி அண்மையில் வீடு திரும்பினார். ஆனால் உடல்நிலை மீண்டும் மோசமானதால் இன்று காலை ஜிப்மர் மருத்துவமனையில் ராதாமணி அனுமதிக்கப்பட்டார். எனினும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பயன் அளிக்காததால் அவரின் உயிர் பிரிந்தது. திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி மரணம் அடைந்ததால் சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 100ஆக குறைந்தது.
இதையடுத்து திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரி விரைகிறார்.நண்பகல் 12 மணியளவில் கு.ராதாமணி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். ராதாமணியின் மரணம் திமுக பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாமணி எம் ஏ படித்துள்ளார். விவசாய குடும்பத்தைச் ராதாமணி, மாவட்ட மூத்த திமுக பிரமுகர்களில் இவரும் ஒருவர் ஆவார். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். திருமணம் செய்து கொள்ளாமல் திமுகவுக்காக உழைத்து வந்தவர் ஆவார். ராதாமணி மரணம் காரணமாக விரைவில் விக்ரவாண்டி தொகுதியிலும், வசந்தகுமார் எம்பியாக மாறியதால் நாங்குநேரி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இத்துடன் வேலூர் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.