×

சந்தை மதிப்பு அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை மீண்டும் உயர்த்த முடிவு

* வருவாய் இலக்கை அடைய புது யுக்தி * பொதுமக்கள் எதிர்ப்பு

சென்னை: சந்தை மதிப்பு அடிப்படையில் மீண்டும் வழிகாட்டி மதிப்பை உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி வந்தது. இந்த வருவாயை பெருக்கும் வகையில் புதிதாக கடந்த 2012ல் ஏப்ரல் 1ம் தேதி புதிய வழிகாட்டி மதிப்பு அமலுக்கு வந்தது. இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு குளறுபடி இருந்ததால் கூடுதல் வருவாய் ஈட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, ஏற்கனவே ஈட்டிய வருவாய் இலக்கை கூட அடைய முடியாமல் பதிவுத்துறை தவித்து வந்தது. இந்நிலையில், வழிகாட்டி மதிப்பு குளறுபடியை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்ைக எழுந்தது. ஆனால், வழிகாட்டி மதிப்பு குளறுபடியை சரி செய்யாமல் கடந்த 2017ல் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது. அதன்பிறகு பத்திரப்பதிவு வேகமெடுத்தது. இருப்பினும் வருவாய் இலக்கு நிர்ணயித்தாலும் அதை அடைவதில் சிக்கல் உள்ளது.

குறிப்பாக, கடந்த 2018-19ல் 11,513 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 11,002 கோடி மட்டுமே வருவாய் இலக்கு அடைந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் 13,123 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் இலக்கை அடைவது தொடர்பாக அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.அப்போது அமைச்சர், ஐஜி பேசுகையில், கடந்த 2012ல் புதிய வழிகாட்டி மதிப்பு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு 7 ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது வரை வழிகாட்டி மதிப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் வீடு, நிலத்தின் சந்தை மதிப்பு ஏறி விட்டது. அதை கருத்தில் கொண்டு சந்தை மதிப்பு அதிகரித்துள்ள பகுதிகளில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி கொள்ளலாம். இதுதொடர்பாக பதிவுத்துறை ஐஜியிடம் முன் அனுமதி பெற்று அந்த பகுதிகளில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தலாம். இதுதொடர்பாக டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள் வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். இதன் மூலம் பதிவுத்துறைக்கு கூடுதலாக வருவாய் எட்ட முடியும். மேலும், வருவாய் இலக்ைக அடையாத சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர்கள் பேசியதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்நிலையில் வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடியை சரி செய்யாமல் சந்தை மதிப்புக்கு ஏற்ப எனக்கூறி கொண்டு வழிகாட்டி மதிப்பை உயர்த்த முடிவு செய்து இருப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



Tags : Based , market value, Decided, guide
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...