சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1991ம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
பொதுவாக, வாழ்நாள் சிறை தண்டனை என்பது நடைமுறையில் 14 ஆண்டுகள் என்றே கணக்கிடப்பட்டு, தண்டனைக் காலத்தை கழித்தவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், 28 ஆண்டுகள் முழுமையாக சிறை தண்டனையை அனுபவித்து விட்டார்கள். இவர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி அளித்த தீர்ப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று ஆணையிட்டது.
அதை தொடர்ந்து, செப்டம்பர் 9ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161வது பிரிவின்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி தங்களுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், அந்த பரிந்துரை தங்களுக்கு அனுப்பப்பட்டு இன்றுடன் 276 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை அதன்மீது எந்த முடிவையும் தாங்கள் எடுக்காதது வருத்தமளிக்கிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் விஷயத்தில் தங்களுக்கு கட்டற்ற அதிகாரம் உள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் அண்மையில் உறுதி செய்ததுடன், இந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் ஆணையிட்டது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்ட போதிலும் 7 தமிழர்கள் விடுதலை குறித்து தாங்கள் முடிவெடுக்காததன் நியாயத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் விடுதலைக்கு ஆதரவாக இவ்வளவு அம்சங்கள் இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் முடிவெடுக்க ஆளுநராகிய தாங்கள் தயங்குவது ஏன்? எனப் புரியவில்லை. அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையை விட அதிகமாக சிறைவாசம் அனுபவித்து விட்ட நிலையில், கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என்று தான் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களை மன்றாடுகிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.