சேலம்:சேலம் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திராஜ். எம்பிஏ பட்டதாரி. இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த பிஇ பட்டதாரியான தனசிரியாவுக்கும் சீலநாயக்கன்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. பின்னர், புதுமண தம்பதியினர் கழுத்தில் மாலையுடன் ஹெல்மெட் அணிந்து கொண்டு டூவீலரில் சுமார் 3 கிலோ மீட்டர் ஊர்வலமாக சென்றனர்.. இந்த தம்பதிக்கு, சீலநாயக்கன்பட்டி அருகே புறக்காவல்நிலைய போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். இந்த ஊர்வலத்தை முடித்துவிட்டு மண்டபம் வந்த அவர்களை ஹெல்மெட்டோடு ஆரத்தி எடுத்து உறவினர்கள் வரவேற்றனர்.
இதுகுறித்து மணப்பெண் தனசிரியா கூறுகையில், `ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடந்து வருகின்றன. ஆனாலும் மக்கள் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமலே செல்கின்றனர். திருமணம் முடிந்ததும் மணமாலையுடன் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் புறப்பட்டோம். மாலையுடன் எங்களை வாகன ஓட்டிகள் பார்க்கும்போது, ஹெல்மெட்டின் முக்கியத்துவம் அவர்களுக்கு புரியும். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,’’ என்றார்.