இளம்பிள்ளை: இளம்பிள்ளை பகுதியில், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத பிடிஓ மீது பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.சேலம் மாவட்டம் இளம்பிள்ளை ஏகாபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், மகுடஞ்சாவடி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:இளம்பிள்ளை அருகே ஏகாபுரம் ஊராட்சிக்குட்பட்ட 4வது வார்டு ரெட்டியூர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இப்பகுதியில், சீரான குடிநீர் வினியோகம் கேட்டு கடந்த மாதம் 11ம் தேதி, இப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மகுடஞ்சாவடி பிடிஓ மலர்விழி உள்ளிட்ட அதிகாரிகள், குடிநீர் பிரச்னையை உடனடியாக நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், அதன் பின்னர் 2மாதமாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்காத மகுடஞ்சாவடி பிடிஓ மலர்விழி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.