சென்னை: பிளஸ் 2 ஹால் டிக்கெட், பெற்றோர் படிப்பு சான்றிதழ் கேட்டு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி நடக்கிறது என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ‘நீட்’ தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் இணையம் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்த போது கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
விண்ணப்பத்தில் எந்தெந்த சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும் என்று பட்டியல் தரப்பட்டு இருக்கிறது. பிளஸ் 2 தேர்வு எழுதியபோது அளிக்கப்பட்ட தேர்வு மைய நுழைவுச் சீட்டு கேட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், அதற்கு முன்பும் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள், ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் முயற்சிக்கும் வகையில் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதி இருக்கின்றனர்.
அவர்களிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 எழுதிய தேர்வு மைய நுழைவுச் சீட்டு கேட்டால் எங்கே போவார்கள், அதேபோல பெற்றோரின் சான்றிதழ்களின் நகல் இணைக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டுள்ளது. அதில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் கேட்கப்பட்டு இருக்கின்றது. இவற்றை கேட்பதன் மூலம் ‘நீட்’ தேர்வில் தகுதி பெற்றுள்ள மாணவர்களையும் ‘வடிகட்டி’ வாய்ப்பை மறுக்கும் சதியோ இவை என்றுதான் கருத வேண்டியுள்ளது.