×

கோவையில் 2வது நாளாக ரெய்டு தீவிரவாத தொடர்பு உள்ளவர் கைது: முக்கிய ஆவணங்கள் சிக்கின

கோவை: கோவையில் இரண்டாவது நாளாக போலீசார் நடத்திய சோதனையில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இலங்கையில் கடந்த 21.4.19ம் தேதியான ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடித்து 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கோவையில் 3 பேரின் வீடுகளில் கடந்த மாதம் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் கொச்சியில் இருந்து வந்திருந்த என்ஐஏ அதிகாரிகளும், கோவை போலீசாரும் இணைந்து கோவையை சேர்ந்தவர்களான முகமது அசாருதீன்(32), சதாம் உசேன்(26), அக்ரம் ஜிந்தா(26), அபுபக்கர் (29), இதயத்துல்லா(38), இப்ராஹீம் (28) ஆகியோரது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தினர். இவர்களின் வீடு, அலுவலகங்களில் இருந்து மொபைல் போன்கள், 29 சிம்கார்டு, 10 பென் டிரைவ், 300 ஏர் கன் புல்லட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இவர்களில், அசாருதீன் கரும்புக்கடையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அபுபக்கர் சித்திக் போத்தனூரில் உள்ள திருமண மண்டபத்தில் பணியாற்றுகிறார். ஷேக் இதயத்துல்லா, தேன் வியாபாரம் செய்கிறார். சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா ஆகியோர் நகைக்கடையில் பங்குதாரராக உள்ளனர். இப்ராகிம், வாசனை திரவியம் தொழில் செய்கிறார் என்பது தெரியவந்தது. இதுதவிர, விசாரணையின்போது, திடுக் தகவல்கள் வெளியானது.

இவர்கள் 6 பேரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இளைஞர்களை சேர்க்க மூளைச்சலவைசெய்து, தமிழகம் மற்றும் கேரளாவில் சில இடங்களில் தாக்குதல் மேற்கொள்ள முடிவுசெய்து உள்ளனர். 6 பேருக்கும் முகமது அசாருதீன் தலைவராக செயல்பட்டுள்ளார். முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இலங்கை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகவும், மனித வெடிகுண்டாகவும் செயல்பட்ட ஜஹ்ரன் ஹாஷிம் என்பவருடன் பேஸ்புக் நண்பராக இருந்துள்ளார்.
சுமார் 2 வருடமாக ஜஹ்ரன் ஹாஷிமை பேஸ்புக்கில் பின்தொடர்ந்துள்ளார். முகமது அசாருதீன், ஹில்லாபா ஜிஎப்எக்ஸ் என்ற பெயரில் பேஸ்புக் அக்கவுன்ட் தொடங்கியுள்ளார். அந்த அக்கவுன்டுக்கான லோகோவில் ஐஎஸ்ஐஎஸ் கொடி இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் பலர் நண்பர்களாக இணைந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டார். மீதமுள்ள 5 பேரையும் கொச்சியில் உள்ள தனிக்கோர்ட்டில் நேற்று ஆஜராக என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதனைதொடர்ந்து, நேற்று 6 பேரும் கொச்சியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜராகினர்.
இந்நிலையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில், உதவிகமிஷனர் செட்ரிக் இம்மானுவேல் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை அன்புநகரில் உள்ள ஷாஜகான், உக்கடம் வின்சென்ட் ரோட்டிலுள்ள முகமது உசைன், கரும்புக்கடையிலுள்ள ஷேக் ஷபியுல்லா ஆகியோரது வீடுகளில்  சோதனை நடத்தினர். சோதனையின்போது செல்போன்கள், லேப்டாப், சிம்கார்டுகள், கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க்குகள், வங்கி கணக்கு ஆவணங்கள், பென் டிரைவ்கள், மெமரிகார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, கேரளாவில் தாக்குதல் நடத்த சதி
ேசாதனை குறித்து கோவை போலீசார் கூறியதாவது: 3 பேரும் (ஷாஜகான், முகமது உசைன், ஷேக் ஷபியுல்லா) வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ்நாடு, கேரளாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இவர்கள் தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் மற்றும் சிரியா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள். 3 பேரும் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பின் மூளையாக செயல்பட்ட ஜக்ரான் காசிமுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் 3 பேர் மீதும் சட்ட விரோத செயல் தடுப்பு சட்டத்தின்கீழ் போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : arrest ,Raid ,Coimbatore , Raid ,terrorist , complicated
× RELATED ஓபிஎஸ்சுக்கு நெருக்கமான டாக்டரின்...