சென்னை : நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சாதாரண மக்கள் காணாமல் போனதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இளம்பெண் மாயமான விவகாரம்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தனது 19 வயது மகள் கெளசல்யா காணாமல் போனதாக திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மகேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் 4 மாதத்திற்கு முன் புகார் அளித்தும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர். மேலும் சாதாரண மக்கள் புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்குமா? எனவும் கேள்வி எழுப்பினார். மாதம் ஆனால் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அதற்கான பணியை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் துறை உறவினர்கள், அல்லது அவர்கள் வீட்டில் இப்படி யாரேனும் காணாமல் போய் இருந்தால் இப்படித்தான் சாதாரணமாக எடுத்து கொள்வார்களா? என கேள்வி எழுப்பினார்.
நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல்துறை செயல்படுமா?
மேலும் திரைப்பட நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல்துறை செயல்படுமா? என கேள்வி எழுப்பினர். மாதாமாதம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் உண்மையுடன் செயல்பட வேண்டும் எனவும் இல்லையென்றால் அதற்கான பலன்களை அவர்கள் அனுபவிப்பார்கள் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதிகள் இந்த புகார் தொடர்பாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது...? விசாரனையின் தற்போதைய நிலை தொடர்பான விவரங்களை அறிக்கையாக வரும் திங்கட்கிழமை சமர்பிக்க உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.