சென்னை: சென்னை கோட்டை அருகே அதிகாலை நேரத்தில் சைக்கிளிங் சென்ற இளைஞரிடம் பட்டன் கத்தியை கொண்டு மிரட்டி கொள்ளையடித்த 2 கொள்ளையர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். சென்னையில் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் வாக்கிங் செல்போரை மிரட்டி வழிப்பறி செய்வதற்காக பட்டன் கத்திகளுடன் ஒரு கும்பல் திரிந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சென்னை கோட்டையை அடுத்துள்ள நேப்பியர் பாலம் அருகே இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஒரு இளைஞர் சைக்கிளிங் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருளில் மறந்திருந்த இருவர் திடீரென அந்த இளைஞரை வழிமறைத்து பட்டன் கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். இதனை தொடர்ந்து விசாரணையில் அவர்கள் இருவரும் சைதாப்பேட்டையை சேர்ந்த ஆகாஷ் மற்றும் போரூரை சேர்ந்த கோபிநாத் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் வேறெங்கெல்லாம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.