×

சிங்கப்பூரில் போதையில் போலீசாரை தாக்கிய இந்தியர் கைது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மது குடித்து விட்டு போலீசாரை தாக்கியது தொடர்பாக இந்தியர் கைது செய்யப்பட்டார்.இந்தியாவை சேர்ந்த முருகேசன் ரகுபதி ராஜா. சிங்கப்பூரில் உள்ள `எவர்டன் பார்க்’ குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஞாயிறன்று குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டார். அப்போது, சத்தம் போட்டு குடியிருப்பில் வசிப்போருக்கு தொந்தரவு அளித்தார். மேலும், அருகில் இருந்த டக்ஸ்டன் பூங்காவில் உள்ள மர பெஞ்சுகளை சேதப்படுத்தினார். அவரது அட்டகாசம் தாங்க முடியாமல் போலீசாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது.

அவரை விசாரிக்க வந்த போலீசாரையும் தாக்கினார். இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்தனர்.இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல் உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த  குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் நிலையில், அவருக்கு அதிக பட்சமாக 4 ஆண்டுகள் சிறையும், ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என கூறப்படுகிறது.முன்னதாக, ஒருவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவரிடம் இருந்து 160 சிங்கப்பூர் டாலர் பணம், ஏடிஎம் கார்டை கொள்ளையடித்து சென்றதாக முருகேசன் மீது மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Indian , Singapore, police, Arrested, Indian
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...