×

திருவையாறு அருகே காதலுக்கு எதிர்ப்பு காதலியுடன் ஓடியவர் படுகொலை: 9 பேர் கும்பல் வெறிச்செயல்

திருவையாறு: காதலியுடன் ஓட்டம் பிடித்த வாலிபர், சமயபுரத்தில் பதுங்கியிருந்தபோது காரில் கடத்தி வந்து திருவையாறு அருகே 9 பேர் கும்பல் அவரை படுகொலை செய்தது.தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மணலூரை சேர்ந்த வீரமணி மகன் பிரசாந்த் (19). சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். பாபநாசம் தாலுகா பகுதியை சேர்ந்த முருகராஜ் மகள் விஜயா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 12ம் வகுப்பு வரை  படித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இது விஜயாவின் பெற்றோருக்கு தெரியவந்து அவர்களை கண்டித்தனர். இந்நிலையில் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 8ம் தேதி முருகராஜ் ஒரு புகார் செய்தார்.  அதில் தனது மகளை காணவில்லை. அவரை பிரசாந்த் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்திருந்தார். அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து பிரசாந்த், விஜயாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை திருவையாறு அடுத்த பனவெளி கிராமம் வெட்டாறு தென்கரையில் வாய் கட்டப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் பிரசாந்த் படுகொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய  விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பிரசாந்த், விஜயா ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி உள்ளனர். இந்நிலையில் காதல் ஜோடி, திருச்சி அடுத்த  சமயபுரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததால் பெண் வீட்டார் 9 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு சென்றனர். காதல் ஜோடியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.பெண்ணை உறவினர் வீட்டில் இறக்கி விட்டு விட்டு பிரசாந்தை மட்டும் வெட்டாற்றுக்கு கொண்டு வந்து சரமாரியாக வெட்டியும், உருட்டுக்கட்டையால் அடித்தும் படுகொலை செய்து வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Thiruvaiyar ,gang mongers , Resistance, love , girlfriend,mongers
× RELATED திருவையாறு கோயிலில் சித்திரை...