கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வல்லவிளை பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்தது. கடல் அலைகளின் சீற்றம் காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. தற்போது இந்த நிலை புயலாக மாறியது. இந்த புயல் தற்போது குஜராத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் புயல் காரணமாக கேரளா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, கன்னியாகுமரியில் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு கடற்கரை பகுதியான அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளை கிராம பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவரை தாண்டி கடல் அலைகள் வீடுகளுக்குள் புகுந்தது. இதன் காரணமாக 50கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்துள்ளது. அதில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு முதல் இந்த பகுதியில் கடல் சீற்றம் நிலவி வந்துள்ளது. மேலும் கடல் சீற்றம் காரணமாக கரையோர பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு சென்றதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. கடலோர பகுதியில் கடல்அரிப்பு தடுப்பு சுவர், தூண்டில் வளைவு ஆகியவை கட்டப்படவேண்டும் என்பது இந்த பகுதி மீனவர்கள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.