×

குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என உறுதியேற்க வேண்டும்: பெற்றோருக்கு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் அனைவரும் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என  பெற்றோர், பணியில் அமர்த்தமாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதியேற்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளி சென்று கல்வி பயிலவும், ஆடல், பாடல், விளையாட்டு என்று மகிழ்ச்சியாக செல்ல வேண்டிய குழந்தை பருவத்தில் வேலைக்கு செல்வதென்பது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும் ஊறுவிளைவிக்கக்கூடியது.

குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட, உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது. கல்வி எனும் செல்வம் பெற்று வளர்ந்து செழித்து மிளிரவேண்டிய பருவத்தில், வேலை பளுவினை சுமந்து நிற்கின்ற குழந்தைகளை, குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தை பருவத்தினையும், முறையான கல்வியினையும் உறுதி செய்வதே தமிழக அரசின் அடிப்படை குறிக்கோளாகும். குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாடு, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக தடை செய்து, அதனை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் நாம் அனைவரும் குழந்தைகளின் உரிமைகளை மதித்திடுவோம். குழந்தைகளை, வேலைக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர்களும், பணியில் அமர்த்தமாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதியேற்று தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றிட அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : children , Child, Chief Minister
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...