புதுடெல்லி: இந்திய ஓவியர் பூபென் காகர் ஓவியம், ரூ22.39 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. மும்பையில் பிறந்த பூபென் காகர், குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் வசித்து வந்தார். தனது நண்பரின் தூண்டுதலால் இவர் ஓவியங்கள் வரையத் தொடங்கினார். இவரது ஓவியங்கள் மனித உடல், இயற்கை, இந்திய புராணங்கள், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை கருவாக கொண்டவை. இந்நிலையில், நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சோத்பை என்ற ஏல நிறுவனம், கடந்த திங்கட்கிழமை லண்டனில் நடத்திய ஏலத்தில், 1986ம் ஆண்டில் பூபென் வரைந்த டூ மென் இன் பனாரஸ்’ என்ற ஓவியத்தை ஏலம் விட்டது. ஓரினச்சேர்க்கை பற்றி விளக்கும் இந்த ஓவியம், ரூ22.39 கோடிக்கு ஏலம் போனது. இதன் மூலம், இதற்கு முந்தைய தனது ஏல விற்பனை சாதனைகளை பூபென் முறியடித்துள்ளார்.
இதற்கு முன், 1982ம் ஆண்டில் அவர் வரைந்த ஓவியம் ரூ 9.71 கோடிக்கு ஏலம் போனது. சுவிட்சார்லாந்தை சேர்ந்த கை அண்ட் ஹெலன் பார்பியர் ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனையான 29 இந்திய படைப்புகளில் பூபெனின் ஓவியங்கள் மட்டும் ரூ66.23 கோடிக்கு ஏலம் போயின. பூபென் காகரின் ஓவியங்களில் யூ கான்’ட் ப்ளீஸ் ஆல்’, டூ மென் வித் எ பிளவர்’ உள்ளிட்ட ஓவியங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.