×

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட புகார் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீதான மெமோ ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தபோது  சூதாட்டம் நடத்தியவர்களிடம் பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீதான சார்ஜ் மெமோவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ல் ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியின்போது பல தொழிலதிபர்கள், அதிகாரிகள், கியூ பிராஞ்ச் எஸ்பியாக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத்குமார் அரசியல் புள்ளிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு அவருக்கு 2014 ஏப்ரல் 9ம் தேதி விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியது.

இதை எதிர்த்து சம்பத்குமார் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தான் டிஎன்பிஎஸ்சி மூலம் 1991 டிசம்பர் மாதம் டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டேன். பின்னர் 2009ல் ஐபிஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றேன். என்மீது வழக்கு தொடர்ந்ததில் உள்நோக்கம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் தமிழக உள்துறையிடம் அனுமதி பெறவில்லை. எனவே, மனுதாரருக்கு தரப்பட்ட மெமோ ரத்து செய்யப்படுகிறது. உள்துறையிடம் உரிய அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது என்று உத்தரவிட்டனர்.

Tags : IPL ,Sampath Kumar ,cricket match ,IPS ,High Court , IPL Cricket match, gambling complaint, IPS officer Sampath Kumar, canceled the memo,
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?