புதுடெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தற்காலிக தலைமை ஆணையராக சரத்குமாரை மத்திய அரசு நியமித்துள்ளது. ஊழலுக்கு எதிராக சிபிஐ எடுக்கும் நடவடிக்கைகளை கண்காணித்து வரும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் ஒரு தலைமை ஆணையர், 2 ஆணையர்கள் இடம் பெறுகின்றனர். இதற்கான தலைமை ஆணையர், பிரதமர் தலைமையில் உள்துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் தனிப்பெரும் எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சியின் தலைவர் கொண்ட குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்.
இந்நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய கே.வி. சவுத்ரி, கண்காணிப்பு ஆணையர் டி.எம். பாசின் ஆகியோர் கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் ஓய்வு பெற்றனர். இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, இந்த ஆணையத்தின் தற்காலிக தலைமை ஆணையராக சரத் குமார் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு பணியாளர் அமைச்சகம் கூறியுள்ளது. முன்னதாக தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்த சரத் குமார், கடந்தாண்டு ஜூனில் ஆணையத்தின் ஆணையராக பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் அடுத்தாண்டு அக்டோபரில் முடிகிறது. கடந்த மார்ச் மாதம் முதல், மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை அரசு பணியாளர் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.