அண்ணாநகர்: வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரன், நேற்று காலை அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது பைக்கை அதே பகுதியில் நிறுத்தி இருந்தார். 11.30 மணியளவில் அங்கு வந்த வாலிபர், எஸ்.ஐ., சந்திரனின் பைக்கை கள்ளச்சாவி போட்டு திறந்துள்ளார். பின்னர், நைசாக பைக்கை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றார்.
இதை பார்த்த எஸ்.ஐ., சந்திரன், அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். அப்போது, அந்த வாலிபர் எஸ்.ஐ., சந்திரனை தள்ளிவிட்டு தப்ப முயன்றார். இதை பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, அமைந்தகரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (எ) சதீஷ் (22) என்பது தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து, இவர் இதற்கு முன்பு வேறு எங்காவது பைக் திருட்டில் ஈடுபட்டாரா என விசாரிக்கின்றனர். பட்டப்பகலில் போக்குவரத்து போலீஸ் பைக்கை வாலிபர் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.