×

திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் கீழே விழுந்து காயம்

திருவொற்றியூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி மேரி (50). இவர்களது மகன் பாஸ்கர், மணலியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அவரை பார்க்க சில தினங்களுக்கு முன் பாலுவும், மேரியும் சென்னை வந்தனர். மகனை பார்த்து விட்டு நேற்று காலை நெல்லூர் செல்வதற்காக திருவொற்றியூர் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது, அங்கு வந்த ரயிலில் பெண்கள் பெட்டியில் மேரி ஏறினார். அதே பெட்டியில் பாலுவும் ஏற முயன்றார். பெண்கள் பெட்டி என தெரிந்ததும் இறங்கி ஆண்கள் பெட்டியில் ஏறினார். உடனே மேரியும் இறங்கி, கணவர் ஏறிய பெட்டியில் ஏற ஓடி வந்தார்.

அதற்குள் ரயில் புறப்பட ஆரம்பித்தது. ஓடும் ரயிலில் ஏற முயன்ற மேரி தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ரயில் நிறுத்தப்பட்டது. பாலு இறங்கி ஓடி வந்தார். சக பயணிகள் உதவியுடன் மேரியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvottiyur ,railway station , woman , train ,Thiruvottiyur railway station ,fell down
× RELATED தீக்குளித்த பெண் சாவு கணவன் காயம்