சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு விசாரிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். முன்னதாக வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிதரன் விலகி கொண்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
விசாரணையின் போது, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதும், நீதிபதி சசிதரன் விசாரிக்க மறுத்துவிட்டார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இருந்தபோது, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சசிதரன், தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், வேறு அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, உடனடியாக வேறு அமர்வை அமைக்க வேண்டும் என ஆலை தரப்பில் தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வில் முறையிடப்பட்டது. இந்த நிலையில், இதுசம்பந்தமாக பிற்பகலில் நிர்வாக உத்தரவு பிறப்பிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு, நாளை அல்லது நாளை மறுநாள் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.