சென்னை: நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் ரமேஷ்கண்ணா உள்ளிட்ட 3 பேர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எதிர் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்தப்படயுள்ளது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு இம்முறையும் நாசர் போட்டியிடுகிறார். மேலும் பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால் மனுதாக்கல் செய்துள்ளார்.
இவர்களுக்கு போட்டியாக சங்கரதாஸ் அணி என்ற பெயரில் நடிகர் பாக்யராஜ் தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது. நாசரை எதிர்த்து பாக்யராஜும், விஷாலை எதிர்த்து நடிகர் ஐசரி கணேஷும் களம் காண்கின்றனர். இந்நிலையில் நடிகர்கள் ரமேஷ்கண்ணா, விமல், மற்றும் நடிகை ஆர்த்தி கணேஷ் ஆகியோரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளாக சந்தா செலுத்தாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.