×

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகியுள்ளனர். உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு விசாரிக்க பட்டியலிட்ட நிலையில், நீதிபதி சசிதரன் வழக்கு விசாரணையில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை  திறக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது.

வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம் என தீர்ப்பு


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி பல்வேறு விதமான நோய்களை பரப்புவதாக புகார் எழுந்தது. இதையடுத்து  அந்த ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே 22ம் தேதி  நடந்த போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் , தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதித்து, தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம்” என்று தீர்ப்பளித்தனர்.

நீதிபதி சசிதரன் அமர்வு விசாரிக்க அறிவிப்பு

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது நீதிபதி சத்யநாராயணன் மதுரைக்கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை நீதிபதி சசிதரன் அமர்வுக்கு பட்டியலிடப்பட்டது.

 நீதிபதி சசிதரன் விலகல்

ஆனால் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகியுள்ளனர். ஏற்கனவே மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதால் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி சசிதரன்  விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றவும் நீதிபதி சசிதரன் தலைமை நீதிபதி தஹில் ரமணிக்கு பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற பரிந்துரையை பரிசீலித்து மாலை முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி தஹில் ரமணி தெரிவித்துள்ளார்.

Tags : Sasitharan ,Chennai High Court ,trial ,Sterlite , Judge Sasitharan, Vigalak, Vedanta Company, HC, Sterlite
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...