×

பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் நாட்டு வான்வெளியில் பறந்து செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ஜுன் 13 மற்றும் 14ம் தேதிகளில் ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தானின் வான் எல்லை வழியாக கிர்கிஸ்தானில் உள்ள பிஸ்கேக் நகருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தனது நாட்டு வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் திடீர் தாக்குதல் நடத்தியது. அதில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து பாலக்கோட் என்னும் இடத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தடை விதித்தது.

பாகிஸ்தானில் மொத்தம் 11 வழித்தடங்கள் உள்ளன. இதில் 2 வழித்தடத்தில் மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 வழித்தடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது வரை தடை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டிய நிலை பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது. இதனையடுத்து மோடி செல்வதற்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா அரசு பாகிஸ்தான் அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் வான்வெளி வழியே மோடி பயணம் செய்யும் விமானம் பறப்பதற்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விடுத்த அழைப்புக்கு, இந்தியா செவிசாய்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Narendra Modi ,airspace ,Pakistan , Prime Minister Modi, aircraft and Pakistani airspace
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...