×

வில்லிவாக்கம் சிட்கோ நகரில் குடிநீர் தொட்டி மேல்தளம் சீரமைக்கும் பணி தீவிரம்

அண்ணாநகர்: வில்லிவாக்கம் சிட்கோ நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு புழல் ஏரியில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு, இங்குள்ள 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் சேமித்து, விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் தொட்டியின் மேல்தளம் கடந்த 6 மாதத்திற்கு முன் உடைந்தது. இதனை சீரமைக்க பலமுறை அப்பகுதி மக்கள் முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், தொட்டி திறந்த நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இந்த தொட்டியில் இருந்து கடும் தூர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் பார்த்தபோது நாய் ஒன்று தொட்டியின் உள்ளே விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி கடந்த 2ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அந்த குடிநீர் தொட்டியின் மேல்தளத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : water tunnel tunneling process ,Vilavankam Sidco
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...