பெரம்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் சண்முகம் (45), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கண் பார்வை தெரியாது. இவருடைய 14 வயது மகள் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஷாயின்ஷா (42) என்பவர், தனது வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி அலறி கூச்சலிட்டதால், வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார்.
அங்கிருந்து தப்பித்து ஓடிவந்த சிறுமி, இதுபற்றி அக்கம் பக்கத்தினரிடம் கூறி அழுதாள். அவர்கள், எம்கேபி நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார், ஷாயின்ஷாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கைதான ஷாயின்ஷாவுக்கு திருமணமாகி மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.