×

அரபிக்கடலில் புயல் குஜராத்திற்கு கனமழை எச்சரிக்கை

அகமதாபாத்: அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறக்கூடும் என்பதால் குஜராத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் தற்போது கடும் வெப்பம் நிலவி வருகிறது. முக்கிய நகரங்களில் கடந்த வாரம் அதிகபட்ச வெப்பநிலை காணப்பட்டது. அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு குஜராத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இது வடக்கு நோக்கி மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் என மாநில வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெயந்த் சர்கார் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெயந்த் கூறுகையில், “அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரமடைந்து புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இதனால் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு வருகிற 13 மற்றும் 14 தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடலுக்கு சென்றுள்ளவர்கள் விரைவில் திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கும்படி மாநில அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கடலோர மாவட்டங்களான சவுராஷ்டிரா, பாவ்நகர், அம்ரேலி, ஜூனாகாத், ஜாம்நகர், போர்பந்தர், துவாரகா மற்றும் கட்ச் உள்ளிட்ட இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு கன மழை பெய்யும்” என்றார்.

Tags : Storm ,Gujarat , Arabian Sea, Storm Gujarat, Heavy Rain, Warning
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...