சென்னை: குடிக்க தண்ணீர் கூட தரமுடியாத நிலையில் இருப்பவர்கள் ஆட்சியில் இருந்து என்ன பயன் என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் வரலாறு காரணாத வறட்சி கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசின் முக்கிய வேலை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதாகும். மழை பொழிவு குறைந்துவிட்டது என்று ஒரு அரசே கூறுவது சரியானது அல்ல. குடிநீர் தண்ணீர் கூட கொடுக்க முடியாத நிலையில் ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சி செய்ய தகுதியற்றவர்கள்.
நீட் தேர்வில் அரசு பள்ளி மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளில் படித்த 4 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது எப்படி சமூக நீதியாகும். இந்த மாணவர்கள் எப்படி மருத்துவ கல்லூரிக்கு செல்ல முடியும். எப்படி பொறியியல் கல்லூரிக்கு செல்ல முடியும். நீட்தேர்வு என்பது சமமற்ற தேர்வாக இருக்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு தமிழகத்துக்கு நீட்தேர்வு தேவையில்லை என்பதுதான். பத்தாம் வகுப்பில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பின்பு பன்னிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு இரண்டு தேர்வையும் தாண்டி மூன்றாவதாக நீட் என்கிற தேர்வு நடக்கிறது. இந்த மூன்று விதமான தேர்வுகள் தேவையற்றது. பிளஸ்2 மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவக்கல்விக்கு சேர்க்கை நடக்க வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். அதற்கு காங்கிரஸ் முழு ஆதரவை தெரிவித்துள்ளது.
அதிமுக இரட்டை தலைமை அல்ல. 200 தலைமைகள் வந்தாலும் தமிழகத்தில் இனிமேல் அவர்களுக்கு இறங்கு முகம்தான். தமிழகத்தில் அதிமுக இனிமேல் எந்த தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வரமுடியாது. அதற்கு முக்கிய காரணம். பாஜவின் இரண்டாவது அணியாக அதிமுக செயல்படுவதுதான். இது தமிழக மக்கள் அனைவருக்கும் மிகத் தெளிவாக தெரிந்துவிட்டது. இதனால் தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக அதிமுகவினர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால்தான் அதிமுக கடுமையான உட்கட்சி பூசல் என்னும் நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது.