பழநி: பழநி வையாபுரி குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால், மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. பழநி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்கு 50க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவற்றில் ஆயக்குடி, பாலசமுத்திரம், மானூர், பெருமாள்புதூர், நெய்க்காரப்பட்டி, ராசாபுரம், குரும்பபட்டி, கோதைமங்களம், வையாபுரி, பழநி, வரதமாநதி பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட குளங்களில் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம், மீன்வளத்துறையால் மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பழநி நகரின் மையப்பகுதியில் உள்ள வையாபுரி குளத்திற்கு வரதமாநதி அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. வரதமாநதி அணையில் இருந்து வரும் தண்ணீரில் கட்லா, ஜிலேப்பி, மிர்கால் உள்ளிட்ட மீன்கள் வந்து விடும்.
இதனால் இந்த குளத்தில் 2 கிலோ முதல் 10 கிலோ எடை வரையிலான மீன்கள் கிடைக்கும். கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கால் இக்குளத்தில் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குளத்தில் அதிகளவில் மீன்கள் உள்ளன. இந்நிலையில் குளத்தில் அதிகளவில் சாக்கடை நீர் கலந்ததாலும், நீரில் குறைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான எடையுள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் இதனை நம்பி வாழ்ந்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கிலி கூறுகையில், ‘‘குளத்தில் கலக்கும் கழிவுநீரால் நீரின் தூய்மைத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மீன்கள் உயிர் வாழ முடியாமல் செத்து மடிகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.