சென்னை: மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போனதற்கு அதிமுகவின் இரட்டைத் தலைமை நிர்வாகமே காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஒற்றை தலைமையில் இயங்கினால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்றார். மேலும் இரட்டைத் தலைமை தேவையில்லை என்று அதிமுகவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்த கேள்விக்கும் திருநாவுக்கரசர் பதிலளித்தார்.
இதையடுத்து அவர், மோடி மந்திரி பதவியை அளிக்க தயாராக இருந்தாலும் இரட்டை தலைமையாக உள்ளதால்தான் தமிழ்நாட்டில் ஒரு மந்திரி வருவதற்கான வாய்ப்பும், பிரதிநிதித்துவமும் இல்லாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும் அதிமுகவில் குழப்பம் இருப்பதாக திருநாவுக்கரசர் குறிப்பிட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மிகவும் பலவீனம் அடைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.