சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியான நாராயணா பள்ளியில் காலி இடத்தில் இருந்து குப்பைகளை பற்றவைத்த தீ செடிகள், காய்த்த மரங்களில் பரவி பள்ளி வளாகம் முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டு மாணவர்களுக்கு மூச்சி திணறல் ஏற்பட்டுள்ளது. மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியான நாராயணா பள்ளியில் இன்று காலை 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்பு இருந்துள்ளது. அப்பள்ளிக்கு இடையே காலியான மனை உள்ளது, அம்மனையில் ஏற்பட்ட தீ விபத்தானது அருகில் உள்ள பள்ளிகளுக்கு பரவ தொடங்கியுள்ளது.
புகைமூட்டம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு மூச்சித்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ளவர்கள் உடனடியாக குரோம்பேட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பள்ளிக்கு அருகில் உள்ள காலிமனையில் தீ பற்றியதால் அப்பகுதியில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் அனைத்தும் எரித்து நாசமாகின.