×

தஞ்சை பெரிய கோயிலில் பரபரப்பு... சாமி சிலைகளுக்கு முத்தம் திருச்சி வாலிபர் கைது

திருச்சி: தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சாமி சிலைகளுக்கு முத்தம் கொடுத்து அதை பேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார். தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலகப்புகழ் மிக்க இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அதுபோல் சுற்றுலா சென்ற ஒரு வாலிபர் கோயிலில் உள்ள சிலைகளின் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டும், அந்த சிலைகளுக்கு முத்தம் கொடுப்பது போன்றும் படம் பிடித்து அதை பேஸ்புக்கில் பதிவிட்டார். இது வைரலாக பரவியது. இந்த பதிவுக்கு பெரும்பாலானவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதை பதிவிட்டவர் திருச்சியை சேர்ந்தவர் என தெரியவந்தது. சாமி சிலைகளுக்கு முத்தம் கொடுப்பது அநாகரீகமானது, அவதூறு பரப்புவது போன்றது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவது போல் உள்ளது. எனவே அந்த பதிவை வெளியிட்டவர் யார் என கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து கமிஷனர் உத்தரவுப்படி பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை நடத்திய விசாரணையில், பேஸ்புக்கில் பதிவிட்டவர் திருச்சி கல்லுக்குழியை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (25) என்பது தெரியவந்தது. இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம். கல்லுக்குழியில் தனது சகோதரி வீட்டில் தங்கி, வீடுகளுக்கு உணவு சப்ளை செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து முஜிபுர் ரகுமானை கைது செய்ய கன்டோன்மென்ட் போலீசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் முஜிபுர் ரகுமானை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags : Trichy ,youngster ,Samyas , Tanjore, big temple, arrested
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...