×

விசாரணையில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ மீது தாக்குதல்

புழல்: ரெட்டேரி மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் பாரின் எதிரே இரு வாரங்களுக்கு முன்னால் 2 பேர் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு கிடந்தனர். தகவலறிந்து மாதவரம் போலீசார் வந்து பார்த்தபோது ஒருவர் இறந்தது தெரிந்தது. எனவே உயிருக்கு போராடியவரை போலீசார் மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து சிறப்பு படை அமைத்து குற்றவாளியை தேடி வருகிறார்.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் ஆண்ட்ரின் ரமேஷ் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் கொளத்தூர் அடுத்த ராஜமங்கலம் காவல் நிலைய பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் குமாரசாமியின் மகன் சதீஷ்குமார் (22) உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் கையில் இருந்த பீர் பாட்டிலால் உதவி ஆய்வாளரை மண்டையில் தாக்கியுள்ளார். இதில் எஸ்.ஐ ஆண்ட்ரின் ரமேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் துடித்தார். தகவலறிந்து ராஜமங்கலம் போலீசார் விரைந்து வந்து போலீசார் ரமேஷை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : investigation , Investigative, involved, police, SI, attack
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்