தாம்பரம்: சேலையூர் - அகரம் தென் பிரதான சாலையில், மப்பேடு சந்திப்பு அருகே நேற்று முன்தினம் மதியம் ஒரு கார் மின்னல் வேகத்தில் சென்றது. இந்த கார், திடீரென தறிகெட்டு ஓடி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளில் வேகமாக மோதியது. தொடர்ந்து, முன்னால் சென்ற இரண்டு பைக்குகள் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில், அகரம் தென் பிரதான சாலை, பதுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த கிளரசன் கேன்வாஸ் பிரபு (18) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் விக்ரம் (18) மற்றும் மப்பேடு, கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (43), அவரது மனைவி சாந்தி (40) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் விக்ரம் மற்றும் ஆறுமுகம் ஆகியோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு உயிர் தப்பினர்.
கிளரசன் கேன்வாஸ் பிரபு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆறுமுகத்தின் மனைவி மேல்சிகிச்சைக்காக பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற காரை கண்டறிந்து, பறிமுதல் செய்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள அகரம் தென் பிரதானசாலை, பதுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த வரதன் (54) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.