குளச்சல்: மணவாளக்குறிச்சி சந்திப்பில் இருந்து காவல் நிலையம் செல்லும் சாலை கடந்த சில காலமாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் மணவாளக்குறிச்சியில் உள்ள மத்திய அரசின் அரிய மணல் ஆலை (ஐ.ஆர்.இ.) டிப்பர் லாரிகள் அதிகமாக இயங்குவதால் இந்த சாலையை மணல் ஆலை நிர்வாகம் பராமரித்து வருகிறது. நேற்று இந்த சாலையை செப்பனிடும் பணியில் மணல் ஆலை ஒப்பந்தக்கார பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது சாலை தரமில்லாமல் செப்பனிடுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. பொதுமக்கள் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குட்டிராஜனிடம் முறையிட்டனர்.
இதையடுத்து குட்டிராஜன் தலைமையில் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.தரமான பொருட்களால் சாலை சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் சாலையை செப்பனிட வேண்டாம் என பொதுமக்கள் கோஷமிட்டனர். தகவலறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்படவில்லை. திங்கள்கிழமை செயல் அலுவலரிடம் பேசி தீர்வு செய்யலாம். அதுவரை சாலை பணியை செய்யக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை பணி நிறுத்தப்பட்டது. சாலை பணியாளர்கள் திரும்பி சென்றனர். இச்சம்பவத்தால் மணவாளக்குறிச்சியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.