பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்துள்ள தி.அகரம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய அளவிற்கு தண்ணீர் வசதி இருந்தும் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வழங்கும் குடிநீரை 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்
பயன்படுத்தி வந்தனர். தற்போது, நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்த காரணத்தால் முழுமையான கொள்ளளவில் தண்ணீர் சேமிப்பது இல்லை.
இந்த நீர்த்தேக்க தொட்டியின் படிக்கட்டுகள் அனைத்தும் சேதமடைந்து விட்டதால், இதனை தூய்மைப்படுத்தியே பல மாதங்கள் ஆகிறது. மேலும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள், மாணவ, மாணவிகள் நீர்த்தேக்க தொட்டி வழியாக அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக மாற்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும், சேதமடைந்த தொட்டியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.