கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது 3 ஓட்டல்கள் மற்றும் 3 தேவாலயங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 258 பேர் பலியானார்கள். 500 பேர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பாகவே தீவிரவாத இயக்கத்தினர் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக எச்சரித்ததாகவும், இதுபற்றி அதிபர் சிறிசேனாவிடம் தெரிவித்ததாகவும் இலங்கையின் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் கூறியிருந்தார். ஆனால் இதனை அதிபர் சிறிசேனா தொடர்ந்து மறுத்து வந்தார். எந்த அதிகாரியும் தாக்குதல் எச்சரிக்கை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இலங்கை குண்டுவெடிப்பு பற்றி பாராளுமன்ற தேர்வுக்குழு விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த பதவி நீக்கத்துக்கான காரணம் குறித்து அதிபர் அலுவலகம் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை. குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பு பாதுகாப்பு குறைபாடு நிலவியது குறித்து பாராளுமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.