×

தென்மேற்கு பருவமழை தொடக்கம்: மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கியதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார். தமிழகம் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவை பெற்று வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு போதுமான மழை பெய்யவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்தது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் குறைவான மழை பொழிவே இருக்கும். வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில், தென்மேற்கு பருவமழையிலாவது ஓரளவு மழை பெய்யுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென் மேற்கு பருவ காற்று அரபிக்கடல் பகுதியில் வலுவடைந்திருப்பதால், தெற்கு அரபிக்கடல் பகுதி, லட்சத் தீவு, மாலத் தீவு, கன்னியாகுமரி கடல் பகுதியில் மேகங்கள் அதிகரித்துள்ளது. தென் மேற்கு பருவ மழை கேரளாவிலும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் நேற்று தொடங்கியுள்ளது. தென் மேற்கு பருவ மழை தொடங்கியதன் காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தமிழகத்தை பொறுத்த வரையில் இயல்பாக இருக்கும். சென்னையில் அடுத்த ஒரு வாரத்தில் வெப்பம் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.

Tags : districts ,West , Monsoon
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...