திருமலை: சென்னையைச் சேர்ந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா கடந்த 3 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் உள்ளூர் ஆலோசகர் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்து வந்தார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி கடந்த 3 ஆண்டுகளாக ஸ்ரீகிருஷ்ணா பதவி வகித்து வந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் ரெட்டி அரசு பதவியேற்றுள்ளது. இதைத்தொடர்ந்து புதிய அறங்காவலர் குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீகிருஷ்ணா அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி மற்றும் சென்னை வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளூர் ஆலோசகர் கமிட்டி தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் வெங்கடேஸ்வர சுவாமி ஆசிர்வாதத்துடன் பக்தர்களுக்கும் பல்வேறு சேவைகளை செய்துள்ளதாகவும் ஒத்துழைப்பு அளித்த தேவஸ்தான ஊழியர்களுக்கும் சென்னையில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தனது ராஜினாமா கடிதத்தில் ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.