×

பள்ளிகள் திறந்து ஒரு வாரமாகியும் புத்தகம் தராததால் ஜெராக்ஸ் எடுத்து படிக்கும் மாணவர்கள்

நெல்லை: தமிழகத்தில் பள்ளிகள் திறந்த போதிலும் புதிய பாட புத்தகங்கள் முழுமையாக தயாராகாததால் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு நகல் (ஜெராக்ஸ்) வழங்கி அதை வைத்து படிக்கும் நிலை உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த கல்வியாண்டில் 1, 3, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை மாற்றி புதிய பாட புத்தகங்கள் அறிமுகம் செய்தது. அப்போது பள்ளி திறந்த பிறகும் பாடப்புத்தகங்கள் முழுமையாக மாணவர்களின் கைகளில் சென்றடையாத நிலை இருந்தது. சில பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு வரை முக்கிய பாடபுத்தகங்கள் கிடைக்காமல் இருந்ததால் மாணவர்களும், கற்பிக்கும் ஆசிரியர்களும் சிரமப்பட்டனர். இதனால் பாடத்திட்டம் மாற்றப்பட்ட பிளஸ்1 வகுப்பில் கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் செண்டம் எண்ணிக்கை மிகவும் சரிந்தது. இந்த நிலையில் இந்த கல்வியாண்டிற்கு 2, 3, 4, 5, 7, 8, 10, 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 352 பக்கங்கள் முதல் 368 பக்கங்கள் கொண்ட பாடப்புத்தகம் விலை ரூ.180 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை முதல் நடந்து வந்தது. இது பள்ளி திறப்பதற்கு முன்பு நிறைவு பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 3ம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிப்பும் வெளியானது. ஆனால் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் பல பள்ளிகளில் சில பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. குறிப்பாக 3, 4, 5 வகுப்புகளுக்கு உரிய ஆங்கில வழிக்கல்வி பாடப்புத்தகங்கள், பல பள்ளிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதனால் புதிய பாடத்திட்டப்படி மாணவர்கள் கைகளில் புத்தகம் இல்லாமலேயே ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நிலை உள்ளது. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆன்லைனில் இருந்து பாடங்களை பதிவிறக்கம் செய்து அதனை நகல் (ஜெராக்ஸ்) எடுத்து கற்றுத் தருகின்றனர். எனவே அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் புதிய பாடப்புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Xerox , Book
× RELATED அக்கரையில் உள்ள பல கோடி மதிப்புள்ள...