×

தொடர்ந்து மிரட்டல் வருகிறது: நடிகர் சங்க சொத்துகளை காப்பாற்ற மீண்டும் போட்டி: நடிகர் விஷால் பேட்டி

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. விஷால் அணியினர் மீண்டும் போட்டியிடுகின்றனர். அவர்களை எதிர்த்து கே.பாக்யராஜ் தலைமையில் மற்றொரு அணியினர் போட்டியிடுகின்றனர். விஷால் அணியினர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது: தேர்தலில் 2 அணிகள் போட்டியிடும் என்பது வழக்கமானதுதான். ஆனால், எங்கள் அணியில் இருந்து சிலர் எதிரணிக்கு சென்றதுதான் எதிர்பாராதது. அது ஏன் என்பதை அவர்களிடமே கேட்க வேண்டும். குஷ்பு, லதா, ‘‘பருத்திவீரன்’’ சரவணன் உள்பட பலர் எங்கள் அணிக்கு புதிதாக வந்துள்ளனர். கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். புதிய கட்டிடத்துக்கான பணிகள் மட்டும் முடியவில்லை. காரணம், எஸ்.வி.சேகர் போன்ற சிலர் கோர்ட் மூலம் தடை வாங்குகின்றனர். அதனால் கட்டிட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் நான்கைந்து மாதங்களில் அனைத்து பணிகளும் முடியும்.

ஐசரி கணேஷ் தேர்தலில் போட்டியிட விரும்பினார். நானும் விரும்பினேன். அவர் ேபாட்டியிடும் காரணம் வேறு, நான் போட்டியிடும் காரணம் வேறு என்பதால் தனித்தனியாக போட்டியிடுகிறோம். நடிகர் சங்கத்தின் சொத்துகளை காப்பாற்றவே தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடுகிறேன். அவர் எதை பாதுகாக்க போட்டியிடுகிறார் என்று அவர்தான் சொல்ல வேண்டும். நடிகர் சங்க தேர்தலில் அரசியலின் பங்கோ, குறுக்கீடோ இல்லை. எனக்கு மிரட்டல் வருவது உண்மைதான். அது ஒன்றும் புதிதில்லை. இந்த முறையும் எங்கள் அணி வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vishal ,actor , Vishal
× RELATED சொல்லிட்டாங்க…