×

மாணவர்கள் மீது தொடர் தாக்குதல் தொடுக்கும் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் போராட்டம் வெடிக்கும்: திமுக எச்சரிக்கை

சென்னை: “மாணவர்கள் மீது தொடர் தாக்குதல் தொடுக்கும் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து மாபெரும் போராட்டம் வெடிக்கும்” என்று திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை,எளிய-தாழ்த்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியரின் மருத்துவக் கனவை தகர்க்கும் வகையில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட “நீட்” தேர்வால் தோல்வி அடைந்து அவமானப்பட்டு, தற்கொலை செய்த மாணவர்களின் பட்டியல் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதைப் பற்றி மாநில முதல்வர் எடப்பாடியும் கவலைப்படவில்லை-இந்திய பிரதமர் மோடியும் அலட்சியப் போக்குடன் இருந்து வருகிறார். இதனால் அடுத்து வரும் பத்தாண்டுகளில் தமிழர்கள் எவரும் மருத்துவராக முடியாத பரிதாப நிலை உருவாக்கியுள்ளது. கலைஞர், 2009ம் ஆண்டு, அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளின் போது உருவாக்கப்பட்டது தான் கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். புகழ் பெற்ற நூலக அரங்கத்தை, கலைஞர் கட்டினார் என்ற காழ்ப்பின் காரணமாக திருமண அரங்கமாக்கி உத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

கட்சிக்கு அதிமுக என்று பெயர் வைத்துக் கொண்டு, அண்ணாவின் பெயரால் அமையப்பெற்ற - கலைஞர் அமைத்த பிரமாண்ட நூலகத்தை பராமரிப்பு சிறிதுமின்றி பாழடையச் செய்துள்ளது. இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரித்து அனைத்து வசதிகளையும் செய்திட வேண்டும்.அடுத்து இந்தித்திணிப்பை அறிவித்த பாஜ அரசு, தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பைக் கண்டு, குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கையைக் கண்டு இந்தித் திணிப்பை பின்வாங்கியது-அதுவும் கலைஞர் பிறந்த நாளில்.மாணவர்களுக்குரிய இலவச பஸ்பாஸ் திட்டம், ஜெயலலிதா ஆட்சியிலும், இப்போதுள்ள எடப்பாடி ஆட்சியிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இதுவரை வழங்காமல் இந்த அரசு அவமானப்படுத்தி வருகிறது. இம்மாத இறுதிக்குள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு, இலவச பஸ் பாஸை அரசு வழங்க வேண்டும். அடுத்து, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தின் முகப்பு அட்டையில் மகாகவி பாரதியாரின் தலைப்பாகையை காவி வண்ணத்தில் அமைத்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. யாருடையத் தூண்டுதலில் இந்த அக்கிரமம் நடைபெற்றது என்பதை, முதல்வரும், கல்வி அமைச்சரும் தெரிவிக்க வேண்டும். ஆகவே தமிழக மாணவர்களை தொடர்ச்சியாக வஞ்சித்து, வாட்டி, வதக்கி, வன்கொடுமையாக வாழ்நாளையே கருகச் செய்திடும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக மாணவர் அணி மாபெரும் மாணவர் போராட்டத்தை கையில் எடுக்கும் என்று எச்சரிக்கை செய்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : fight ,central ,state governments ,DMK , DMK
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...