×

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஹெல்மெட் சோதனையை தீவிரப்படுத்திய போக்குவரத்து போலீசார்

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஹெல்மெட் சோதனையை போக்குவரத்து போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும் பொதுமக்கள் பலரும் ஹெல்மட் அணியாமல் பயணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கட்டாய ஹெல்மட் சட்டத்தை அரசு முறையாக அமலபடுத்தவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக ஹெல்மட் அணியாதவர்கள் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனவும், ஏன் வாகனத்தை பறிமுதல் செய்யகூடாது எனவும் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் ஹெல்மட் அணியாதவர்கள் மீது தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 8 மணியில் இருந்து ஹெல்மட் அணியாதவர்கள் மீது வழக்கும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. அதி நவீன இ-சலான் மிஷின்கள் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளதால் விரைவாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். அதன்படி நேற்று 8 மணி முதல் 10 மணிக்குள் 55 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இது குறித்து பெரியமேடு போக்குவரத்து ஆய்வாளர் சந்திரமௌலி கூறியதாவது: கடந்த ஆண்டு மட்டும் ஹெல்மட் அணியாதவர்கள் என 5 லட்சம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விரைவில் ஹெல்மட் அணியாதவர்கள் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிநவீன இ-சலான் மிஷின்கள் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் விரைவாக வழக்குள் பதிவு செய்ய வசதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Traffic police , Helmet
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...